December 22, 2018
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை அடுத்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் விஷால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து, சங்க அலுவலகத்திற்கு சென்ற விஷால் பூட்டை உடைக்க முயன்றார். அப்போது போலீசாருக்கும் விஷால் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் மாலை விஷால் விடுவிக்கப்பட்டார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்ததற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்தார்.இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தி.நகரில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. தாயரிப்பாளர் சங்கத்திற்கு வந்த கிண்டி தாசில்தார் சீலை அகற்றினார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் விஷால் தாயரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைகளை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.