May 4, 2020
தண்டோரா குழு
ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ள நிலையில் இன்று காலை முதலே கோவை டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை பின்பற்றி கூடினர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல மளிகைக் கடைகள், மொத்த வியாபார கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.