November 23, 2018
தண்டோரா குழு
நாளை முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நேற்று தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள்பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மதுராந்தகததில் 14 செ.மீ., மகாபலிபுரம் 10 செ.மீ, உத்தரமேரூர், வந்தவாசி பகுதிகளில் 9 செ.மீ, மரக்காணம், பரங்கிப்பேட்டை, வானூர் திண்டிவனம், செஞ்சியல் 8 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணியில் 7 செ.மீ, அவிநாசி, போளூர், கடலூர், சோழவரம், ரெட்ஹில்ஸ் பகுதிகளில் 6 செ.மீ., நெய்வேலி, திருவண்ணாமலை, கலவை, ஆயக்குடி, சீர்காழி, செய்யாறு, தாமரைப்பாக்கம், சங்கராபுரம், மணிமுத்தாறு, புதுச்சேரி, வேலூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய தென்தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் அடுத்து வரும் 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழையின் அளவு படிப்படியாக குறையும் எனவும், அக்டோபர் 1 முதல் தற்போது வரை சென்னையில் 32 செ.மீ, மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இயல்பான மழையின் அளவு 57 சதவீதம். இயல்பை விட 44 சதவீத குறைவாக மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் 1 முதல் இன்று வரை 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 33 செ.மீ, இயல்பை விட 13 சதவீத மழை குறைவாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.