February 25, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மார்ச் 4ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார் அதில், தஞ்சை பள்ளி அக்ரகாரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. விதியின் படி டாஸ்மாக் கடைகள் அமைய உள்ள இடத்திலிருந்து 100 மீ தொலைவிற்கு கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இருக்கக்கூடாது. ஆனால் பள்ளி அக்ரகாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே பேருந்து நிலையம், மாநகராட்சி அரசுப் பள்ளி, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி, பெருமாள் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும் என்பதால், பள்ளி அக்ரகாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தஞ்சை பள்ளி அக்ரகாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டனர். மேலும், தமிழகத்தில் 2016ம் ஆண்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன. 2016ம் ஆண்டிற்கு பிறகு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, அவை எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். 2016க்கு பிறகு எத்தனை கடைகள் புதிதாக திறக்கப்பட்டன என்றும், தற்போது எத்தனை கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் எப்போது டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் மதுக்கடைகளால் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக
அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மார்ச் 4ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.