April 30, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.எனினும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீடித்து வருகிறது.
இந்த சூழலில்,ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது பேசிய மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்,
தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும். எனவே நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்த கட்ட முடிவு செய்யப்படும். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். ஆனாலும் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது.” என்றார்.
ஏற்கனவே மருத்துவர் குழு பரிந்துரைத்தால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.