May 6, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைனில் மதுவை விற்க முடியுமா என தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பின்னர் டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. சமூக விலகல் பின்பற்றப்படும்,பாதுகாப்பும் வழங்கப்படும். கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது. மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும்” என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று கூறியது. மேலும், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
மேலும்,ஆன்லைன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 மதுபாட்டில்கள் வழங்கவும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.