September 24, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. கேரள நிவாரண நிதியாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் இதுவரை நிவாரண நிதி ஆயிரத்து 27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் நடித்த முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் உடன் இருந்தனர்.