August 13, 2020 தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த தடையினால் விநாயகர் சிலை செய்யும் பொம்மை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், 99 சதவீத மக்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ள நிலையில் விநாயகர் வழிபாடு மூலம் மக்களுக்கு தைரியம் வரும்.அரசியல் காரணத்திற்காக சிறுபான்மை ஓட்டுக்காக தடை விதித்துள்ளனர். நக்சலைட் சிந்தனையுள்ள அதிகாரிகள் முதல்வருக்கு தவறான ஆலோசணை வழங்கி தடை விதித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அரசின் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக்கிற்கு ஏன் தடை விதிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பு கொடுப்பது போல, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பாதுகாப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.