July 7, 2020
தண்டோரா குழு
கோவையில் மூடப்பட்டுள்ள தங்க நகை பட்டறைகளை மீண்டும் திறந்து பணி செய்ய அனுமதி கோரி கோயமுத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவையில் ஒரே நகை பட்டறையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் கோவையில் உள்ள சுமார் 25 ஆயிரம் நகை பட்டறைகளை மூட கோவை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் கோயமுத்தூர் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ரகுநாதன்,பாண்டியன் மற்றும் இராஜமோகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கு.இராசமணியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.இதில் ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக ஏற்பட்டுள்ள ஊரடங்கால் தங்க நகை தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறிய அளவில் தங்க நகை பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது ஒரு சிலர் தகுந்த பாதுகாப்பில்லாமல் பணி செய்ததில் ஒரே இடத்தில் பரவிய கொரோனா நோய் தொற்று பரவிய காரணத்தால் கோவையில் உள்ள சுமார் இருபத்தைந்தாயிரம் நகை பட்டறைகளையும் மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. இதனால் தங்க நகை தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாவர்கள் எனவும் எனவே வறுமையில் வாடும் தங்க நகை தொழிலாளர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது கோயமுத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர்கள் ஜலேந்திரன், கேசவ மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் செந்தில், மணிராஜ், குணா,பழனிசாமி,ரமேஷ்,சீனி,மணி ஆகியோர் உடனிருந்தனர்.