December 4, 2018
தண்டோரா குழு
அரசு மருத்துவர்கள், தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கிடக்கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை ஒப்பிடும்போது , தமிழக அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் மற்றும் பணப்படி வழங்கப்படுவதை கண்டித்து இன்று ஒரு நாள் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைளை வலியுறுத்தியபோது , ஊதியம் உயர்த்தி தரப்படும் என தமிழக அரசு வாக்குறுதி கொடுத்து ஒராண்டாகியும் இதுவரை செயல்படுத்தவில்லை. நோயாளிகள் பாதிக்கப்படாமல், அரசுக்கு ஒத்துழையாமை போராட்டத்தை மருத்துவர்கள் கடந்த இருபது நாட்களாக நடத்தி வந்தும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இன்று புற நோயாளிகள் புறக்கணிப்பில் தமிழகம் முழுவதும் 18688 அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், வருகின்ற 8 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யாமல் புறக்கணிப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி இந்த மாத இறுதியில் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தமிழக அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.