May 4, 2018 தண்டோரா குழு
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வருகின்ற ஞாயிற்றுகிழமை 6ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில்,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடி ட்வீட் செய்துள்ளார்.அதில், “எல்லாத் தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்து வைக்க இடமிருக்கிறது.ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழகத்தில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதா?உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து,‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.அருமையான விளையாட்டு.நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா?” எனக் கூறியுள்ளார்.