April 26, 2019
தண்டோரா குழு
மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் சரியில்லாமல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் ஜெ. மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தியது. அந்த வகையில் அப்பல்லோ மருத்துவ நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பியது.
இதற்கிடையில்,ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,ஆறுமுகசாமி ஆணையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக, தமிழக அரசு சாராத 21 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை விசாரணைக்காக நியமிக்க வேண்டும். அப்போலோ தரப்பு மருத்துவர்களை அடிக்கடி விசாரணைக்கு வரச்சொல்லி வற்புத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது,ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை உத்திரவிட்டனர். மேலும், மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.