December 5, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நோக்கி அதிமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தலைமையேற்று முன்னிலைபடுத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் வாலாஜா சாலையிலிருந்து மெரீனாவிலுள்ள ஜெ.நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவடைந்தவுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது.