June 14, 2025
தண்டோரா குழு
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் (LTSI) இணைந்து ஜூன் 14-15, 2025 ஆகிய நாள்களில் கோவையில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த முக்கியமான மருத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர்சி.பழனிவேலு வழிகாட்டுதலில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.ஆனந்த் விஜய் மற்றும் டாக்டர் மேக்னஸ் ஜெயராஜ் ஆகியோர் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இந்த மாநாட்டை சனிக்கிழமை (14.6.2025) ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் அதிநவீன அறுவைசிகிச்சை நுட்பங்கள் – குறிப்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ரோபோட் அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபிக் செயல்முறைகள் குறித்த விரிவான விவாதங்கள் இடம்பெறுகிறது.
மருத்துவ நிபுணர்கள் அண்மைக்கால ஆராய்ச்சிச் சான்றுகள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் குறித்த விரிவான அமர்வுகளில் பங்கேற்கின்றனர். இவை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்பும் எதிர்கால மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முன்னோடி சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டின் தனிச்சிறப்பு அம்சமாக, ஜூன் 13 அன்று தென்கொரியாவின் சியோலில் இருந்து ஜெம் மருத்துவமனைக்கு நேரலை அறுவை சிகிச்சை செயல் விளக்கம் ஒளிபரப்பப்பட்டது இது மருத்துவ முன்னேற்றத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்நேர கல்வி அனுபவம் பங்கேற்பாளர்களுக்கு உலகளாவிய அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மற்றும் புதுமையான நுட்பங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அணுகும் வாய்ப்பை வழங்கியது.
இந்தியாவில் முதல்முறையாக, தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முழுநாள் ‘கல்லீரல் ICU பயிற்சி திட்டம் இந்த மாநாட்டில் இடம்பெற்றது. இந்த முன்னோடி முயற்சி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைக்கு முந்தைய தயாரிப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு நெறிமுறைகளை உள்ளடக்கியது. இந்தச் சிறப்புப்பயிற்சி இந்தியாவில் தேசிய மருத்துவ மாநாட்டில் செவிலிய நிபுணர்களுக்கான முதல் பெரிய அளவிலான கல்வித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்தப்பயிற்சியில் அறுவை சிகிச்சை தயாரிப்பு நடைமுறைகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு நுட்பங்கள் மற்றும் விரிவான நோயாளி நிர்வாக உத்திகள் உள்ளிட்ட நோயாளி பராமரிப்பின் முக்கியமான அம்சங்கள்அடங்கியுள்ளன. வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை விளைவுகள் மற்றும் நோயாளி குணமடைதலுக்குச் செவிலியர்கள் ஆற்றும் முக்கிய பங்கை இந்த முயற்சி அங்கீகரிக்கிறது.
மாநாட்டு அமர்வுகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், ICU மருத்துவ ஊழியர்களுக்கான உறுப்புதான நெறிமுறைகள் மற்றும் விரிவான அறுவைசிகிச்சைக்குப் பிந்தையநோயாளி நிர்வாக உத்திகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியின்போது, தேசிய அளவில் மாற்று அறுவை சிகிச்சை ஃபெலோஷிப் திட்டங்களை முடித்த பத்து மருத்துவ நிபுணர்கள் தங்கள் மாற்று அறுவை சிகிச்சை ஃபெலோஷிப் பட்டங்களைப் பெறுவார்கள். இது துறையில் அவர்களின் மேம்பட்ட நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்வின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், உறுப்பு செயலிழப்பு என்பது உலக அளவில் இன்று அதிகரித்து வருகிறது என்றார்.
இந்தியாவில் 2 வித காரணங்களால் உறுப்பு செயலிழப்பு மக்களிடையே அதிகரிக்கிறது – அதில் ஒன்று வாழ்க்கை முறை பழங்களால் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை. இதை தவிர கால நிலை மாற்றம், சுற்றுசூழல் மாசு போன்றவை இடம்பெறுகிறது.
இன்று உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது. இன்றும் கூட உடலுறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பலரும் உறுப்பு தானம் பெறவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் காத்து வருகின்றனர். தமிழகத்தின் ஏற்படுத்தப்பட்ட பல விழிப்புணர்வு நடவடிக்கைகளால், 250க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். இது நல்ல ஒரு மாற்றத்தை பலரின் வாழ்வில் ஏற்படுத்தியது.
வரும் நாட்களில் உடல் உறுப்பு தானம் , உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் அதை தடுக்கும் வழிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதிகம் உப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.தேவைக்கு அதிகமான 1 காலரியை கூட உட்கொள்ளக்கூடாது. தினம் 45 நிமிடம் என வாரம் 5 நாட்களுக்கு உடற்பயிற்சி/நடைப்பயிற்சி செய்யவேண்டும். முக்கியமாக காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.