June 9, 2020
தண்டோரா குழு
அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரெயில் ஜூன் 12-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும், ரெயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சிறப்பு ரெயில்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.ஆனால் மாநிலத்திற்குள் நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்க வேண்டுகோள் விடுத்தது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று திருச்சி – நாகர்கோவில் உள்பட நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஜூலை 12-ந்தேதியில் இருந்து அரக்கோணம் – கோவை இடையே ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜூன் 12-ந்தேதி முதல் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.