January 27, 2021
தண்டோரா குழு
பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்து விடுதலைப் பத்திரத்தில் சிறை அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இவருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனை காலம் இன்று காலை 10.30மணிக்கு முடிந்தது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்து விடுதலைப் பத்திரத்தில் சிறை அதிகாரிகள் கையெழுத்துப்பெற்றனர். எனினும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.