March 22, 2018 தண்டோரா குழு
சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் நேற்று தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் (மார்ச் 21)புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.
தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றிய போது,சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதனால்,காரணமில்லாமல் தங்களை ராமநாதபுரத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தீ குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேரும் மீதும் மெரினா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.