March 21, 2019
சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு,முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை தனது வீட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.தற்போது அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவுக்கு முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்பதை அறிந்து ஆற்றொணா துயரமும்,மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.கனகராஜ்,புரட்சித்தலைவி ஜெயலலிதா மீதும் கட்சியின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்”.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.