December 14, 2018
தண்டோரா குழு
சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
2006 ஆம் ஆண்டில் இருந்து செந்தில் பாலாஜியை நன்கு தெரியும்.எங்களுடன் நன்றாகத்தான் இருந்தார் செந்தில் பாலாஜி, 4 மாதங்களுக்கு முன் சொந்த பிரச்சினைகள் இருப்பதாக கூறி சென்றார். கஜா புயல் நேரத்தில் நிவாரணப்பொருட்களையும் செந்தில் பாலாஜி அனுப்பி வைத்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். எங்களுடன் காரில் வருவதை குறைத்துக் கொண்டார். செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான், யாரையும் இழுத்து வைக்க முடியாது. சொந்தப்பிரச்சினைகளால் ஒதுங்கி இருப்பதாக கூறியவர் திமுகவில் இணைந்து விட்டார்.
எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பம். செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றதில் வருத்தம் இல்லை. அமமுக கூடாரம் காலியாகவில்லை. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது. எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுத்து பலத்தை காட்ட வேண்டிய நிலையில் திமுக உள்ளது. திமுகவின் நிலைமை மிக மோசமாகிவிட்டதை இது காட்டுகிறது. திமுக அந்த அளவிற்கு ஆர்கே நகரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதனால்தான் எங்கள் கட்சி உறுப்பினருக்கு அவ்வளவு மரியாதை அளிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.