February 5, 2019 தண்டோரா குழு
கோவையின் மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.6 அடியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக பெய்ததால் நவம்பர் மாதம் அணை நிரம்பியது. ஆனால் வானிலை மையம் கணித்தபடி வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், தினமும் எட்டு கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகரப் பகுதியில் 33 வார்டுகளில் வசிப்போருக்கும், வழியோர கிராம மக்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாக உள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி 26.60 அடியாக இருந்தது.
கோடை வெயில் அதிகரிக்கும் சூழலில், அணையில் தேங்கியுள்ள தண்ணீர் ஆவியாவது அதிகரிக்க துவங்கும் சூழல் இருப்பதால் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறைய துவங்கும் என்பதால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.