January 30, 2019 தண்டோரா குழு
சிறுமியை துன்புறுத்திய விவகாரத்தில், நடிகை பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை பானுபிரியாவின் வீட்டில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக வீட்டு வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், சிறுமியின் தாய் நடிகை பானுப்ரியா தன் அடித்து துன்புறுத்துவதாகவும், சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் நடிகை பானுப்ரியா மீது புகாரளித்தார். இதுமட்டுமின்றி பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக
தொந்தரவு தருகிறார் எனவும் அவரது தாயார் புகாரளித்தார்.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பானுப்ரியாவின் வீட்டில் இருந்த அந்த சிறுமியை அன்று மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 14 வயது சிறுமியை வீட்டில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சாமல்கோடா போலீசார் நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலவாரியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.