May 26, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் வதந்தி என வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை சின்னதடாகம் பகுதியில்
விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானை வரகலியாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
ஆனால், அங்கிருந்து மீண்டும் வெளியேறிய சின்னத்தம்பி, திண்டுக்கல் மற்றும் உடுமலைபேட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு புகுந்தது.இதையடுத்து, மீண்டும் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை
கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரக் கூண்டில் அடைக்கப்பட்டது.
அங்கு கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டு 100 நாட்களை எட்டியுள்ளது.
இதற்கிடையில், தற்போது வனத்துறையின் அலட்சியத்தால், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி நோய் வாய்பட்டு கீழே விழுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது வெறும் வதந்தி தான் என ஆனைமலை புலிகள் காப்பக உயரதிகாரிகள் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சின்னத்தம்பி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறது. பாகன்கள் மற்றும் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சின்னத்தம்பிக்கான பயிற்சி காலங்கள் முடிந்து, கூண்டில் இருந்து வெளியே விடும் நேரம் நெருங்கி விட்டது. இது போன்ற வதந்தியான தகவல்களை தவிர்த்தால், அமைதியாக எங்களது பணி முடியும். இதுபோன்ற யானைகளை அடக்கி கையாளுவதற்காக, வரகலியாறு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து நன்கு அனுபவம் கொண்ட பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த பாகன்கள் ஏற்கனவே பல்வேறு யானைகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். பொதுவாக, கூண்டில் அடைக்கப்படும் காட்டு யானைகளின் குணங்களில் ஆக்ரோஷம் காணப்படும். இதனால், மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டு, அமைதிபடுத்தப்படும். ஆனால், சின்னத்தம்பியிடம் இதுபோன்ற குணங்கள் எதுவும் தென்படவில்லை.
வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.