February 14, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையை மீண்டும் பிடிக்கும் பணி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது. கண்ணாடிபுத்தூர் என்ற ஊரில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்தது. எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் கொடுக்காமல் இருந்து வந்தது.
இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கும்கியானை உதவியுடன் சின்னதம்பியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அந்த கும்கி யானையுடன், சின்னதம்பி யானை நண்பனாக பழகி விளையாடி வந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில், உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேலும் சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சின்னதம்பியை பிடிக்கும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கியது. காலை 8 மணிக்கு கால்நடை மருத்துவர் குழு சின்னத்தம்பி முகாமிட்டுள்ள இடத்துக்கு வந்தனர். அதன் பின்னர் இரண்டு ஜே.சி.பி வாகனம் மூலம் சாய்வுதளம் அமைக்கும் பணி தொடங்கியது. அதேபோல் யானை ஏற்ற லாரி வரும் பாதை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலீம், சுயம்பு இரண்டு கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், கரும்பு காட்டிற்குள்ளே இருந்து சின்னதம்பி வராததாலும், யானையை பிடிக்கும் வழிமுறைகள் பற்றி உயரதிகாரிகளின் உத்தரவு வராததால் காலதாமதமானதாலும் மாலை 6 மணிக்கு மேல் யானைக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்பதாலும் சின்னதம்பியை பிடிக்கும் பணியானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், லாரியில் யானையை ஏற்றிய பின்பு பொள்ளாச்சி வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்வதே, தற்போதைய திட்டம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.