February 7, 2019 தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வனத்துறையினர் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். எனினும், மீண்டும் சின்னதம்பி யானை ஊருக்குள் திரும்பியது. இதற்கிடையில், யானையை கும்கியாக மாற்றப்படும் என கூறப்பட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தையடுத்து அந்த முடிவை தமிழக அரசு கைவிட்டு காட்டுக்குள் அனுப்பிவைக்க முடிவுசெய்தது.
இதையடுத்து, உடுமலை பகுதிகளில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், கடந்த ஐந்து நாளாக முகாமிட்டிருந்த இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இதனால் சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தடாகம் பகுதியில் யானை வழித்தடத்திற்கு இடையூறாக இருக்கக்கூடிய செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும். சின்னத்தம்பி யானையால் அங்குள்ள பயிர்கள் சேதமடைந்து வருகிறது. எனவே யானையை முகாமுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் யானையின் நடமாட்டத்தை வரும் 10ம் தேதி வரை கண்காணித்து 11ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.