July 31, 2019
தண்டோரா குழு
கோவையில் சிட்பண்ட்டில் கட்டிய பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த பயனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை 100 அடி சாலையில் உள்ளது தோட்டத்தில் சிட்பண்ட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பயனாளிகள் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு பயனாளியும் கட்டிய பணத்தில் பாதியை மட்டுமே கணக்காக பதிவு செய்து மீதி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தரக் கோரி பல மாதங்களாக பயனாளிகள் கேட்டு வந்தாலும் பணத்தை திருப்பித் தருவதாக தொடர்ந்து கூறி வந்த சிட் பண்ட் நிறுவனம் இதுவரை யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து கோவை பி3 காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பாபுவை இதுவரை காவல்துறை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுவரை பயனாளிகள் அனைவரிடமிருந்தும் பெற்ற பணத்தில் 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்த நிறுவனத்தால் ஆத்திரமடைந்த பயனாளிகள் கோவை 100 அடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்திபுரம் காவல்துறையினர் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பயனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் பணத்தை திருப்பி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப நாட்களாக சிட் பண்ட் மோசடி விவகாரம் கோவையில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.