July 9, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
27 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.ஊராட்சி செயலாளர்களுக்கு,இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தியும் அதற்கான எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டினர்.ஊதிய உயர்வு அளிப்பதால்,அரசிற்கு எந்த வித நிதி இழப்பு இல்லை எனவும், தங்களது நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர்.
மேலும்,தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12 ஆம் தேதி தமிழக முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.