January 25, 2021
தண்டோரா குழு
சாந்தி கியர்ஸ் அரங்காவலராக இருந்த சுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலராக இருந்தவர் சுப்பிரமணியம். இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்தார். இந்த நிலையில், சாந்தி கியர்ஸ் நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது முதல் சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.
உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 119 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. அதில் தொழில் துறையில் சிறந்து விளங்கியதாக சுப்பிரமணியத்திற்க்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இது கோவை மக்களை பெருமையடையச் செய்துள்ளது.