June 5, 2018 தண்டோரா குழு
காதலுக்கு ஜாதி, மதம் , இனம், நாடு என்ற எந்த எல்லையும் இல்லை என்பார்கள்.ஆனால் காதலனை கரம்பிடிக்க எல்லையை தாண்டி காதலி வந்து சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு சிறிய நிறுவனத்தில் இந்தியர் ஒருவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கும் தன் முதலாளி மகளுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில்,அவர் கடந்த பிப்ரவரி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதனால் காதலனை காணாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து காதலனை காண முடிவெடுத்த அப்பெண் குடும்பத்திடம் சொல்லாமல் காதலனைப் பார்க்க அண்டை நாடான நேபாளத்திற்கு சென்றார். அதன்பின், அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளார்.
பின்னர் பல்வேறு இடர்பாடுகளுக்கு பின் இறுதியாக தன் காதலன் தெலுங்கானா மாவட்டத்தில் இருப்பதை அறிந்து காதலனை பார்க்க அங்கு சென்றார். அங்கு நீண்ட நாட்களுக்கு பின் தன் காதலனை கண்ட மகிழ்ச்சியில் அவரை கட்டியணைத்து அழுதுள்ளார். பின்னர் இருவரும் தெலுங்கானாவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தன் மகள் இந்தியாவில் இருப்பதை அறிந்த அந்த முதலாளி இந்தியாவிற்கு வந்து போலீஸாரிடம் தன் மகள் கடத்தி வரப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, அப்பெண் நான் அவரை விரும்பியதால் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு இங்கேயே குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுத்தியுள்ளார்.