February 21, 2019
தண்டோரா குழு
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அச்சடித்தால் சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகை வைக்க மாநகராட்சி நிர்வாக, காவல் துறை நிர்வாக, மாவட்ட நிர்வாகம் ஆகிய அலுவலங்கங்களில் அனுமதி பெற வேண்டும். ஆனால் பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாமல், சிலர் விளம்பர பதாகைகள் வைப்பதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பதாகை, ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களில் சர்ச்சைக்குரிய வாசகங்களும் அவ்வப்போது இடம் பெறுகின்றன. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல், மத ரீதியான மோதல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, காவல் துறை சார்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் வாடிக்கையாளர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அச்சடிக்க கொடுத்தாலும், அதனை அச்சடித்தால் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.