November 7, 2018 தண்டோரா குழு
சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.
விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள சர்கார் படம் நேற்று வெளியானது.ஓட்டு உரிமை குறித்தும் அரசியல் குறித்தும் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.
இந்நிலையில், திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்,
சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது மக்களை வன்முறைக்கு தூண்டும் செயல். சர்கார் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்,நடிகர் விஜய் மற்றும் திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பப்படும் என அவர் கூறியுள்ளார்.