December 30, 2020
தண்டோரா குழு
சமூக ஆர்வலர் வீட்டில் கல் எறிந்து கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை சின்னத்தடாகம் சுற்றியுள்ள ஐந்து பஞ்சாயத்துகளில் கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் மற்றும் கணேஷன் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று செம்மண் திருடியபோது, லாரியுடன் பிடித்து வடக்கு வட்டாட்சியர் மகேஸ்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் உரிய நடவடிக்கை எடுக்காததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் மகேஸ்வரி, கணேஷ் உள்ளிட்ட சிலரை தாக்கி லாரியை மீட்டு சென்றனர்.
இதனையடுத்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ் , ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து கனிம வள கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் இல்லத்திற்கு சென்ற 50 க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கல் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
மேலும் வழக்கை திரும்ப பெறவில்லை எனில் குடும்பத்திலுள்ள நான்கு பேரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதே போல ராஜேந்திரன் என்பவரது வீட்டின் வாயிற்கதவை சூளை உரிமையாளர்களோடு வந்த காவல் துறையினர் உதைத்து தள்ளியதாக குற்றம் சாட்டினர். செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது பல்வேறு புகார்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் கொடுத்தும் பலனளிக்கவில்லை என்றனர். அலைக்கற்றை ஊழலை விட அதிகமான அளவு கனிம வள கொள்ளை நடந்துள்ளதாக தெரிவித்தனர். தங்களது உயிரே போனாலும் வழக்கை திரும்ப பெறப்போவதில்லை என்றனர்.
கணேஷின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல், அவரது வீட்டில் கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். கணேஷ் மற்றும் ராஜேந்திரனின் குடும்பத்தினரின் உயிருக்கு செங்கல் சூளை அதிபர்களால்தான் ஆபத்து இருப்பதாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்களை அடித்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அடிவாங்கியவர்கள் மீதே வழக்கு தொடுத்திருந்தனர். இதனையடுத்து தடாகம் துணைக்காவல் நிலையம் முன்பே சூளை உரிமையாளர்களால் தாக்கப்பட்ட மாணிக்கராஜ், பரமேஷ்வரன் இருவரையும் காவல் துறையினர் பாதுகாப்பாக அழைத்துச்சென்று, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சக்கூடிய நிலையில் செங்கல் சூளை உரிமையாளர்க்ள் கொலை மிரட்டல் விடுத்தும், அனைத்து கட்சியின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால் காவல் துறை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.