February 1, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆளுமையாக செயல்பட்டு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது அதே நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்றும் தொடங்கப்படவில்லை என தெரிவித்தார். அதுபோல் தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இல்லாத நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆளுமையாக செயல்பட்டு தமிழகத்தை வழி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு மாணவர்களுக்கு 2 ஜிபி நெட் இலவசமாக வழங்கும் திட்டம் சிறப்பானது என்றும் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினார். அதேபோல் தமிழக அரசின் 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு தமிழக அரசை பாராட்டுவதாகவும் அதேநேரத்தில் அதில் உள்ஒதுக்கீடு கூறும் பாமக தலைவர் ராமதாசின் கொள்கையில் கருத்து வேறு படுவதாகவும் தெரிவித்தார். மேலும் திமுக, சரத்குமாருக்கு துரோகம் செய்ததா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அப்படி ஒரு சூழ்நிலையை திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு தான் எத்தனை தொகுதிகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது என தெரியும் என்றார்.