February 4, 2019 தண்டோரா குழு
சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி கூறியுள்ள கருத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதல் பற்றி எரிகிறது சபரிமலை விவகாரம். இந்து மத பற்றாளர்கள் இதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது வரை கடும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால் பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு இயக்கங்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.
இந்நிலையில், சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில்,சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான் நான் கேரள முதல்வரின் மிகப்பெரிய ரசிகன். என் இந்த விவகாரத்தில் இவ்வளவு பிரச்னைகள் வருகிறது என்று தெரியவில்லை. ஒரு ஆணாக வாழ்க்கை நடத்துவது மிகச் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்கள் வலி அனுபவிக்க வேண்டும். மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்.
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போது கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டதுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்த துறையில் இருந்தாலும் தவறு. #METOO மூலம் பெண்கள் கூறிய பாலியல் புகார்களால் தவறு செய்தவர்கள் பலரும் பயத்தில் உள்ளனர். எப்போதும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.இவரது கருத்துகளுக்கு சமூகவலைத்தளத்தில் பலர் பாராட்டுகளையும் கண்டனங்களையும் சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடி வருபவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இதனால் சிலர் கேரளாவில் விஜய் சேதுபதியின் படங்களை தவிர்ப்போம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.