November 24, 2018
தண்டோரா குழு
சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது – பிரனாயி விஜயன்
சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலைக்கு கடந்த 20-ந் தேதி இருமுடிக்கட்டுடன் காரில் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் வந்திருந்த பா.ஜனதா தொண்டர்களின் கார்களை பம்பைக்கு அனுமதிக்காததால், அவர் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.பின்னர் சாமி தரிசனம் முடித்து திரும்பும் வழியிலும் பொன் ராதாகிருஷ்ணனுடன் சென்ற தொண்டர்களின் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கேரள காவல்துறையினர் பொன். ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி குமரியில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,
சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டதால்தான் அவருடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. அதில் எந்த தவறுமில்லை. சபரிமலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் சரியான முறையில் நடந்து வருகிறார்கள். அங்கு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் காவல்துறை யினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கேரளாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள். அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என்றார்.