April 3, 2018
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இன்று(ஏப் 3) கோவை வ.உ.சி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் உள்ள வ.உ.சி பூங்காவில் இரண்டு கல்லூரி மாணவர்கள் திடீரென மைதானத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வ.உ.சி பூங்கா முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதும்,அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுது நேரத்தில் வந்த காவல் துறையினர் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.தற்போது இரண்டு பேர் மட்டுமே போராட்டத்திற்கு வந்து இருந்தாலும் நாளை இரண்டாயிரம் பேர் வ.உ.சி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.விசாரணையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேரறிவாளன் மற்றும் சின்னராசு என தெரியவந்தது.ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இதே போல ஒரு சில மாணவர்களுடன் துவங்கியது தான் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.இந்த சூழலில் அதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல் முதலாக கோவை வ.உ.சி பூங்காவில் இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.