June 12, 2020
தண்டோரா குழு
சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும், விரைவில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வருமெனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்பில் மாதிரி சாலை அமைப்பதற்கான பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தயசாலை பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்படும்.பூங்கா, விளையாட்டு உபகரணங்கள்,ஸ்மார்ட் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் பல்வேறு அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் செய்து தருகிறார். கோவை 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பிருந்த அரசு எதுவும் செய்யவில்லை, இதனை பொறுக்க முடியாமல் வரும் விமர்சனங்களை புறந்தள்ளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.தமிழகத்தில் சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும், விரைவில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.