April 30, 2019
தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் முத்தூட் நிதி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் நேற்று முன் தினம் முகமூடி அணிந்த மர்ம நபர் அங்கு பணியில் இருந்த இரண்டு பெண்களை தாக்கி சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை அடித்து சென்றார்.
இது தொடர்பாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக நான்கு தனிப்படைகளை அமைத்து கோவை மாநகர காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண்களை விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், ரேணுகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் தொடர்ந்து 2 தினங்களாக காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது முகமூடி அணிந்து வந்த நபர் ரேணுகாவின் காதலன் என்பது தெரியவந்தது செல்போன் உரையாடல்கள் மற்றும் அழைப்பு விபரங்கள் ஆகியவற்றை சேகரித்த போலீசார் நகை கொள்ளையில் ஈடுபட்டது ரேணுகாவின் ஆலோசனையின் பேரில் சுரேஷ் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷை பிடித்த போலீசார் அவனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஏற்கனவே விசாரணையில் இருந்த ரேணுகா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ள ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் இருவரிடமும் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.