March 6, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தன்னார்வ சேவை அமைப்பாகும். தமிழகம் முழுவதும் 15,000 ஊர்க்காவல் படையினர் சேவையாற்றி வருகின்றனர். அதைபோல், ஊர்காவல் படையில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் பகுதி நேர சேவையாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீருடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம் அலகு, துடியலூர் அலகு, பொள்ளாச்சி அலகு என மூன்று குழுக்களை உள்ளடக்கிய ஊர்க்காவல் படையில் 387 ஊர்க்காவல் படையினர் உள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பாதுகாப்பு பணிகளிலும், கோவில் திருவிழாக்களிலும், இரவு ரோந்து பணிகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதன்பின் இவர்கள் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.