December 21, 2018
தண்டோரா குழு
கிராம நிர்வாக அலுவலங்களில் அடிப்டை வசதி செய்து தர கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிவறை, மின்சாரம்,குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் உடனடியாக அவற்றை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.12 வது நாளான இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அதை செய்து கொடுக்க வேண்டும் எனவும், நாங்கள் அரசிடம் அதை கோரித்தான் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனையடு்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.