December 4, 2018
தண்டோரா குழு
பத்தாண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்க கோரி மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குந்நி முகம்மது என்பவரது இரண்டாவது மனைவி கண்ணம்மா என்கிற ரம்லத். நெடுஞ்சாலைத்துறையில் மேஸ்திரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற குந்நி முகம்மது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை முதல் மனைவிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் முதல் மனைவியும் உயிரிழந்ததால் கணவர் குந்நி முகமது பென்சனை தனக்கு தர வேண்டும் என ரமலத் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் கோரிக்கை விடுத்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் இன்று பிற்பகல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள புளிய மரத்தருகில் வந்த அம்மூதாட்டி திடீரென தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து அதை கொண்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாவட்ட ஆட்சியர் தனக்கு பென்ஷன் தர மறுப்பதாகவும் பென்ஷன் தரும் வரை தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கி இருக்க உள்ளதாகவும் கூறிய அம்மூதாட்டி தான் தற்கொலை செய்து அதற்கு காரணமான மாவட்ட ஆட்சியரை கொலை குற்றவாளியாக்கவே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.