March 16, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் தீட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உறுதியளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். கோவை இரயில் நிலையம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோருடன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்படும் என உறுதியளித்தார். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவர் குறித்தும் நேர்மையாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் அப்போது வலியுறித்தினார். கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தப்படும் எனவும், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இரவு நேர பெங்களூரூ இரயில் வர நடவடிக்கை எடுக்கப்படும்., 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்,
மார்க்சிஸ்ட் வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைப்பார்கள். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை விடுத்தார்.