May 9, 2020
தண்டோரா குழு
மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை மாநகர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள்,கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனையானது 2 நாட்களாக நடைபெற்றது.44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டியும் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மது பிரியர்கள் சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
மேலும்,சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,தவறான முறையில் கடைகளை திறந்து பாட்டில்களை எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கோவை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டது.இதனால் மது பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர்.