August 25, 2020 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும்
தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பூந்தோட்டம் தெரு, இந்திரா நேரு வீதி,விநாயகர் கோயில் தெரு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பின்னர்,அப்பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டுமெனவும்,பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்
தெரிவித்த ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்
தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே
செல்லக்கூடாது,காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திடவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், வீட்டிலுள்ள அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமெனவும், கபசுர குடிநீர் பருகவேண்டுமெனவும் தெரிவித்த ஆணையாளர் அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, கணபதி, அருள்மிகு கோட்டை பிள்ளையார் கோயில் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் வங்கிக் கடன் பெறுவதற்கான விபரங்களை கேட்டறிந்து சிறப்பு முகாம்களில் பதிவு செய்து வங்கி கடன் பெற்றுக் கொள்ளுமாறும், வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் வியாபாரிகளிடம் கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை தெரிவித்தார்.
பின்னர்,வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கொரோனா
சிகிச்சை அளிப்பதற்காக தனியார் திருமண மண்டபத்தில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இம்மையத்தை பார்வையிட்ட ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்
ஷ்ரவன்குமார் ஜடாவத் இச்சிறப்பு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதி குறித்தும், நோயாளிகள் தங்கும் அறைகளில் படுக்கை வசதி குறித்தும்,போதிய வசதிகளுக்காக
மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இவ்வாய்வின்போது வடக்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் இரத்தினம், மண்டல சுகாதார அலுவலர் ராமசந்திரன், உதவி பொறியாளர் நாசர்மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.