July 15, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா என்ற செய்தி வருத்தமளிக்கிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் முன்னுதாரணமாக காட்டப்பட்ட நமது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தில் உள்ள நகரங்களில் இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் அளவிற்கு கோரோனாவின் கோரத்தாண்டவம் உள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலில் தமிழகம், நாட்டிலேயே அதிக பரிசோதனைகள், அதிக குணமானோர் எண்ணிக்கை என்று கோரோனாவிற்கு எதிரான போரில் நமது அரசு இயந்திரம் அல்லும் பகலும் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மக்கள் நல முன்களப்பணியில் கொரோனா தொற்றிலிருந்து கோவை மாவட்ட மக்களை காக்க அயராது உழைத்து பல மாதங்கள் நோய்த்தொற்றில்லா மாவட்டமாக கோவையை பாதுகாப்பான பகுதியாக நிலைநிறுத்த அரும்பாடுபட்டு இன்றளவும் உழைத்து வந்த நமது கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து தனது பணியை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த கொடிய நோய் தொற்றுக்கெதிரான நமது அரசின் முயற்சிகள் அதிதீவிரமாக தொடரும். அரசின் அனைத்து முயற்சிகளுக்கும், குறிப்பாக அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவது, அடிக்கடி கைகளை சோப்பு வைத்து கழுவுவது, பொது சுகாதாரம் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என்று கோவை மக்கள் அரசு நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கோவை என்றாலே விடாமுயற்சி என்று இந்த நோய் தொற்றுக்கெதிரான போரில் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் நின்று வென்று காட்டுவோம்!
இவ்வாறு கூறியுள்ளார்.