June 5, 2018 தண்டோரா குழு
கோவையில் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வலியுறுத்தி தலையில் அந்த பிளாஸ்டிக் பேக்கை அணிந்து பள்ளி மாணவர்கள் நூதன முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள்,மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,சுற்றுச்சூழலை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,கோவை ரயில் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் தலையில் பிளாஸ்டிக் பேக்கை அணிந்து பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களான கப்,பிளேட்,பேக்,ஸ்ட்ரா உள்ளிட்டவைகளால் பல்வேறு சூழல் கேடு ஏற்படுவதாகவும்,பெரும்பாலும் அதன் பயன்பாடு வீட்டில் உள்ளதால் தனிமனித நடவடிக்கையின் வாயிலாக இவ்வகையான பிளாஸ்டிக்கை நிரந்தரமாக அழிக்க முடியும் என்றும், இதனால் நீர்,நிலங்கள் மாசுபாடு குறைக்க முடியும் என்று பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.