April 24, 2026
தண்டோரா குழு
கோவை–திருப்பூர் இடையே அமைந்துள்ள காரணம்பேட்டை பகுதியில், “பேரின்ப பெருவிழா 2026” என்ற சிறப்பு கிறிஸ்தவ ஆன்மிக விழா வரும் ஏப்ரல் 29 முதல் மே 3 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விழா தலைவர் ஜவஹர் சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை–திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை தேவமகிமையின் தோட்டம் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தார்.
உலக அமைதி நிலவவும்,மக்களின் துன்பங்கள் நீங்கவும் வேண்டி நடத்தப்படும் இந்த விழா,கிறிஸ்தவ மக்களுக்காக மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சுமார் 20,000 பேர் வரை இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,இந்த பேரின்ப பெருவிழாவில் சிறப்பு ஆராதனைகள், கிறிஸ்தவ பாடல்கள், ஆன்மிகப் பிரசங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கோவை,மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, பார்க்கிங் வசதி, அமர்வதற்கான இருக்கைகள், தினமும் மூன்று வேளை உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டேனியல் ஜவஹர் சாமுவேல் மற்றும் பிஷப் பெக்சல் ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.