January 14, 2021
தண்டோரா குழு
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்,இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பட்டி மிதித்தல் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உழவு பணியில் ஈடுபடும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு பூஜைகளுடன் மாடுகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பசுமாடு இளநீர், தயிர், பால், நவதானியங்கள் நிரம்பிய பட்டி குளத்தில் கால் வைத்து பட்டி மிதித்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.முன்னதாக சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுக்கப்பட்டது.விழாவில் வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கினார்.
அப்போது வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகையில்,
பொங்கல் நாளில் பட்டி மதித்தல் நிகழ்வு என்பது தமிழகத்தின் முக்கிய நிகழ்வாகும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் இந்த இந்த நிகழ்வில் அவர்கள் எதை முன்னோக்கி வைக்கிறார்களோ அதுவே அந்த வருடத்தின் சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் பட்டி குளத்தில் உள்ள நவதானியத்தை பசுமாடு கால்வைத்து அங்கீகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு மழையும் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும் மேலும் வேளாண்மை பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி நெல்லில் மூன்று ரகங்களும், கேழ்வரகு, வரகு, உளுந்து, குடம்புளி, விளாம்பழம் உட்பட வேளாண்மையில் நீடித்து நிலைக்கும் 11 வகையான பயிர்கள் அறிமுகம் செய்துள்ளோம். இவை அதிக விளைச்சல் தரக்கூடியது. மழை, வெயில் உள்ளிட்ட தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரக்கூடிய வைகளாக உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக அனேக பயிர்களில் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதை விதமாக வேளாண் பல்கலைக்கழகம் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.