July 16, 2019
தண்டோரா குழு
கோவை சின்னவேடம்பட்டி ஏரியை சுற்றி பல வகையான மரக்கன்றுகளை நட்டு,அதற்கு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவையை அடுத்த சின்னவேடம்பட்டியில் உள்ள ஏரி அந்த பகுதியைச் சுற்றியுள்ள உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், நல்லாம்பாளையம்,சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்கிறது. இந்த ஏரியின் நீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் பகுதியில் தொடங்கி துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு வருகிறது.இந்நிலையில் நீண்ட காலமாக இந்த ஏரி நீரில்லாமல் வற்றியதை அடுத்து சின்ன வேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழுவினர் சார்பாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து துடியலூரில் இருந்து வெள்ளக்கிணறு வழியாக ராஜவாய்க்காலை தூர்வாரி அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது பருவமழைக்காலம் தொடங்கி விட்டதால் சீரமைப்பு பணிகள் செய்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் குழுவின் உறுப்பினர் சிவராஜ் பேசுகையில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஏரி சீரமைப்பு பணிகள் செய்து வருவதாகவும், இதுவரை ஏரியை சுற்றி சுமார் பல வகையான மரக்கன்றுகளை நட்டு, அதற்கு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்தி உள்ளோம்.மேலும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.இந்த ஏரியில் 84 வகையான பறவையினங்கள் வாழ்ந்து வருவதாக வன உயிரின கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.இது போன்று தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்களை பொதுமக்கள் முன் வந்து செய்யும் போது தமிழகத்தின் தற்போது நீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.