February 11, 2019
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்களைப் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் வெங்கடேசன் 35. இவர் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்காக வந்துள்ளார்.பின்னர் நேர்முகத்தேர்வு முடிந்து நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார்.அப்போது இரவு சுமார் 11 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தின் முன் சென்று கொண்டிருந்தபோது வெங்கடேசனை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கையில் இருக்கும் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் 200 ரூபாய் மட்டுமே இருந்தது. இதையடுத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி தப்பி சென்றனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வெங்கடேசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான காவலர்கள் சிங்காநல்லூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தும் விரைவாக தகவல்களை திரட்டி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமாக சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இருவரை விசாரித்த பொழுது இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் எஸ் ஐ எச் எஸ் காலனி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்பாஸ் 19,மற்றும் முத்துசாமியின் மகன் அசோக் 23 , என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அவர்கள் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.