October 18, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில்,
சிறுவாணி அணை பகுதியில் நல்ல மழை பெய்வதால் குற்றால அருவியிலும் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதாலும் மரங்கள் விழும் சூழல் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே தடை உள்ளது.வெள்ளப்பெருக்கு குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதே பில்லூர் அணை 97 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கும் சூழல் உள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.